search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்தோஷ் நாராயணன்"

    • சந்தோஷ் நாராயணன் இசையில் கடந்த ஆண்டு வெளியான பாடல் 'என்ஜாய் எஞ்சாமி'.
    • இந்த பாடலை தீ மற்றும் தெருக்குரல் அறிவு பாடியிருந்தனர்.

    சமீபத்தில் நடந்த சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் 'என்ஜாய் எஞ்சாமி' பாடலை தீ மற்றும் மாரியம்மாள் பாடியிருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் இப்பாடலை எழுதி, அதில் நடித்திருந்த தெருக்குரல் அறிவு இடம்பெறவில்லை.

    இதுதொடர்பாக ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் அறிவு ஏன் புறக்கணிக்கப்படுகிறார் என கேள்வி எழுப்பி வந்தனர். இதைத்தொடர்ந்து, அறிவு தான் புறக்கணிக்கப்படுவது குறித்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த பதிவு வைரலானது. இதற்கு பதிலளிக்கும் விதமாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், பாடகி தீ சார்பில் விளக்கமளிக்கப்பட்ட பதிவு ஒன்று வெளியாகியுள்ளது.


    என்ஜாய் எஞ்சாமி

    அதில்,  "எஞ்சாயி எஞ்சாமி பாடலின் ஒவ்வொரு கட்டத்திலும் அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணன் இருவருக்கும் உரிய அங்கீகாரம் வழங்கியுள்ளேன். ஒவ்வொரு முறையும் எனக்கு கிடைத்த வாய்ப்புகளில் அவர்கள் இருவரையும் குறிப்பாக அறிவு குறித்து பெருமையுடனே பேசியுள்ளேன். அவர்கள் இருவரின் முக்கியத்துவத்தை எந்தக் கட்டத்திலும் நான் குறைத்து மதிப்பிட்டது கிடையாது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், மேடையிலும் இருவரின் பங்களிப்பை முன்னிலைப்படுத்தியுள்ளேன்.

    இயக்குனர் மணிகண்டனும், அவரின் `கடைசி விவசாயி' திரைப்படமும் 'எஞ்சாயி எஞ்சாமி' பாடல் உருவாக்கத்துக்கு பெரிய உந்து சக்தியாக அமைந்தது. 'எஞ்சாயி எஞ்சாமி' பாடல் வரிகளும், அதன் உருவாக்கமும் எங்களது அணியால் விவாதிக்கப்பட்டே செம்மைப்படுத்தப்பட்டது. பாடல் வெளியாகும் வரை நாங்கள் அனைவரும் ஒரே பக்கத்தில்தான் இருந்தோம்.

    பாடலுக்கான அர்த்தங்கள் மற்றும் அதன் கதைகள் பெரும்பாலானவற்றை பாடல் வெளியான பின் அறிவின் ஒவ்வொரு இன்டெர்வியூ மூலமாக நான் தெரிந்துகொண்டேன். அறிவு சொன்னது மிகவும் முக்கியமானது மட்டுமல்ல முதன்மையானது என நம்பி, அறிவின் குரல் எப்போதும் ஓங்கி ஒலிக்க வேண்டும் என விரும்பினேன். பாடல் மூலம் கிடைத்த அனைத்து வருமானம் மற்றும் உரிமைகளும் எங்கள் மூவருக்கும் சமமாகப் பகிரப்பட்டன. 'எஞ்சாயி எஞ்சாமி' எட்டிய உயரங்களை அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணனுடன் இணைந்து அனுபவிக்கவே ஆசைப்பட்டேன். ஏதேனும் ஒரு வாய்ப்பு அதில் சமத்துவமின்மையாக இருந்தால் ​​நிச்சயம் அதன் ஒரு பகுதியாக நான் இருக்கமாட்டேன்.


    என்ஜாய் எஞ்சாமி

    கடந்த ஆண்டு வெளியான "ரோலிங் ஸ்டோன் இந்தியா" இதழின் அட்டைப்படத்தில் நானும், ஷானும் இடம் பெற்றிருந்தோம். எங்கள் இணைப்பில் அடுத்து வரவுள்ள ஆல்பத்துக்கான அட்டைப்படமே அது. மற்றபடி, அது "எஞ்சாயி எஞ்சாமி" பாடலுக்கானதோ அல்லது "நீயே ஒலி" பாடலுக்கானதோ அல்ல. அந்த அட்டைப் படத்திலும் அந்த பாடல் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. அறிவு, சந்தோஷ் நாராயணன் மற்றும் மாஜா கலைஞர்கள் பற்றிய கட்டுரைகளை ரோலிங்ஸ்டோன் வெளியிட இருக்கிறது என்பது எனக்கு தெரிவிக்கப்பட்டது. எங்களின் அட்டைப்படம் வெளியாகும் முன்பே ரோலிங் ஸ்டோன் இதழ் ஒரு ட்வீட்டில் அறிவித்தது. அந்த அறிவிப்பை கண்டு நான் மகிழ்ச்சியடைந்தேன்.

    செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் என்னுடன் அறிவையும் பங்கேற்பதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அணுகினர். அறிவு அமெரிக்காவில் இருந்ததன் காரணமாக அவரால் பங்கேற்க முடியாததை அடுத்து அவர் குரலை நிகழ்ச்சியில் பயன்படுத்திக் கொண்டோம். தனது குரலுக்காகவும், பாடலில் அவரின் பங்களிப்புக்காகவும் நிகழ்வில் அறிவு பேசப்பட்டார். 'எஞ்சாயி எஞ்சாமி' பாடலை உருவாக்கியதற்காக சந்தோஷ் நாராயணன், அறிவு, மாஜா உள்ளிட்ட ஒட்டுமொத்த குழுவின் ஆதரவிற்கும் என் இதயத்தின் அடியாழத்திலிருந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த பிரபஞ்சத்தின் மீதும் உயிர்கள் மீதும் கொண்டுள்ள அன்பு, மரியாதையின் பொருட்டால் சக கலைஞர்களால் 'எஞ்சாயி எஞ்சாமி' பாடல் பிறந்தது. என்னைப் பொறுத்தவரை, அது எப்போதும் அப்படியே இருக்கும். உண்மை எப்போதும் வெல்லும்" என்று விளக்கம் கொடுத்துள்ளார்.



    • சந்தோஷ் நாராயணன் இசையில் கடந்த ஆண்டு வெளியான பாடல் 'என்ஜாய் எஞ்சாமி'.
    • இந்த பாடலை தீ மற்றும் தெருக்குரல் அறிவு பாடியிருந்தனர்.

    சமீபத்தில் நடந்த சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் 'என்ஜாய் எஞ்சாமி' பாடலை தீ மற்றும் மாரியம்மாள் பாடியிருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் இப்பாடலை எழுதி, அதில் நடித்திருந்த தெருக்குரல் அறிவு இடம்பெறவில்லை. இதுதொடர்பாக ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் அறிவு ஏன் நிராகரிக்கப்படுகிறார் என கேள்வி எழுப்பி வந்தனர்.


    என்ஜாய் எஞ்சாமி

    இதற்கு பதிலளிக்கும் விதமாக தெருக்குரல் அறிவு தனது சமூக வலைதளப்பக்கத்தில், " "என்ஜாய் எஞ்சாமி பாடலை நானே உருவாக்கி, எழுதி, பாடி, நடித்தேன். யாருமே இதற்கான மெட்டையோ, ஒரு சொல்லையோ தரவில்லை. அந்தப் பாடலை இப்போது இருப்பது போல உருவாக்குவதற்காக ஆறு மாதங்களாக உறக்கமில்லாத, மிகுந்த அழுத்தத்துடன் கூடிய இரவுகளைக் கடந்தேன்.

    இருப்பினும் இது அனைவரும் சேர்ந்து செய்த கூட்டு முயற்சிதான், அதில் சந்தேகமில்லை. இறுதியில் உண்மைதான் எப்போதும் வெல்லும்." என்று பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் 'என்ஜாயி என்ஜாமி' பாடல் உருவான விதம் பற்றி விரிவாக விளக்கம் அளித்து பதிவு ஒன்றை தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    அதில், "கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், நமது வரலாற்றையும் இயற்கையும் கொண்டாடும் விதமாக தமிழில் ஒரு பாடல் உருவாக்க வேண்டும் என்று தீ என்னிடம் கூறினார். அதன் பிறகு நான் `என்ஜாயி என்ஜாமி' பாடலை கம்போஸ், புரோகிராம் மற்றும் ரெக்கார்டிங் செய்து இணைந்து பாடினேன். மேலே கூறப்பட்ட என்னுடைய பணியானது உலகளவில் `தயாரிப்பாளர்' என்று குறிப்பிடப்படுகிறது.

    இதை இந்தத் துறை சார்ந்த பலரும் ஏற்கெனவே அறிவர். நான், தீ, அறிவு எங்களுக்குள் ஒருவர் மேல் மற்றொருவர் வைத்திருக்கும் நிறைந்த அன்பிற்காகவும், தனியிசை மேல் எங்களுக்கு உள்ள காதலாலும் ஒன்றாக இணைந்தோம்.

    தீ மற்றும் அறிவு பாடலைப் பாட ஒப்புக்கொண்ட நிலையில், இருவரும் சேர்ந்து பாடலுக்காக பணியாற்றினர். தீ-யின் பல வரிகளுக்கு அவரே இசையமைத்தார். அறிவு பாடல் வரிகள் எழுத ஒப்புக்கொண்டார். நான் மீதி இசையையும், அறிவு பகுதிக்கான ட்யூனையும் கம்போஸ் செய்தேன்.

    இந்தப் பாடலுக்கான அடித்தளத்தை மிக நுட்பமாகத் தேர்ந்தெடுத்து, பாடலுக்கான ஓட்டத்தையும், திரைக்கதையையும் உருவாக்கி, பல வாழ்க்கை கதைகளைக் கூறி அறிவுடன் பல மணி நேரம் செலவழித்த இயக்குனர் மணிகண்டனுக்கு எங்கள் குழு சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது அற்புதமான திரைப்படமான 'கடைசி விவசாயி'தான் இந்தப் பாடலுக்கு இன்ஸ்பிரேசன்.

    பாடலில் உள்ள ஒப்பாரி வரிகள் அரக்கோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பாட்டிகள் மற்றும் தாத்தாக்களின் பங்களிப்பாகும். அவர்களின் பணியை கௌரவித்த அறிவுக்கு நன்றி. `பந்தலுல பாவக்கா' பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாரம்பரிய ஒப்பாரி பாடல்களில் ஒன்று.


    என்ஜாய் எஞ்சாமி

    ரகிட ரகிட, அம்மா நானா, என்னடி மாயாவி போன்ற எனது பல பாடல்களைப் போலவே, நான் இசையமைக்கும் பாடலில் நானே சில வார்த்தைகளைப் பயன்படுத்துவேன். இந்தப் பாடலில் 'என்ஜாயி என்ஜாமியும்' அப்படிப்பட்ட ஒன்றுதான். என்னுடைய இந்தப் பொருத்தமற்ற சொற்றொடரைச் சுற்றி அறிவு அற்புதமான வரிகளை உருவாக்கியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

    இப்பாடலின் முழு உருவாக்கம் 30 மணி நேரத்திற்குள் செய்யப்பட்டது. படப்பிடிப்பிற்கு முன்பு என்ஜாயி என்ஜாமியை பதிவு செய்ய சில மணிநேரங்களே இருந்ததால், எங்களின் பணி வேகமாகவும், வேடிக்கையாகவும் தன்னிச்சையாகவும் இருந்தது.

    இந்தப் பாடலின் அனைத்து வருமானத்தையும், உரிமைகளையும் தீ, அறிவு மற்றும் நானும் சமமாகப் பகிர்ந்து கொண்டோம். இதில் நான் வெளிப்படைத் தன்மையுடனே இருக்க விரும்புகிறேன். தீ, அறிவு இருவருக்கும் பக்கபலமாக நின்று எனது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து தளங்களிலும் பணியாற்றி, சம்பந்தப்பட்ட கலைஞர்களுக்கு எந்தவொரு பாரபட்சமின்றி கிரெடிட்ஸ் கொடுத்துள்ளேன்.

    என்ஜாயி என்ஜாமி ஆடியோ வெளியீட்டு விழாவில் அறிவு பற்றிய எனது பேச்சே அதற்கு சாட்சி. செஸ் ஒலிம்பியாட் 2022-ல் தீ மற்றும் கிடாக்குழி மாரியம்மாளின் என்ஜாயி என்ஜாமி நிகழ்ச்சியைப் பொறுத்தவரை, அறிவு அப்போது வெளிநாட்டில் இருந்ததால் அவரால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. மேலும் அவரது தற்போதைய அமெரிக்க பயணத்திட்டம் காரணமாக அவர் கலந்து கொள்ள முடியாது என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடமும் தெரிவித்திருக்கிறார்.

    அறிவு ஒரு அற்புதமான கலைஞன் என்பதை நான் எப்போதும் உணர்ந்திருக்கிறேன். அறிவின் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்திருக்கும் 'அனல் மேலே பனித்துளி' திரைப்படத்தில் நான் இசையமைத்து விரைவில் வெளிவரவிருக்கும் "கீச்சே கீச்சே" பாடல் 'என்ஜாய் என்ஜாமி' பாடலுக்குக் கொடுத்த அதே அன்பை 'கீச்சே கீச்சே' பாடலுக்கும் கொடுத்தால் அது ஒரு கலைஞனாக அறிவுக்கு பொருத்தமாக இருக்கும்.

    ஒடுக்கப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுப்பதற்காக எனது தளத்தை நான் எப்போதும் பயன்படுத்தியிருக்கிறேன். எனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் கலை இரண்டுமே அதற்குச் சான்றாகும். எனது வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் நாங்கள் பின்பற்றும் பணி நெறிமுறை, கலாசாரம் மற்றும் தோழமை ஆகியவை அனைவரும் அறிந்த ஒன்றே! கலையின் மீதும், நம் நாட்டில் உள்ள அனைத்து அற்புதமான கலைஞர்களின் மீதும் மட்டுமே அன்பு கொண்டிருங்கள், வரும் மாதங்களில் உலகளவில் பல புதிய தமிழ் குரல்களின் எழுச்சியைக் காண்போம்!

    இந்தப் பாடல் உருவாக உதவியாக இருந்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி. இந்த சிறப்பு பாடலில் ஈடுபட்டுள்ள எவருடனும் பொது அல்லது தனிப்பட்ட விவாதத்திற்கு நான் முற்றிலும் தயாராக இருக்கிறேன். மேலும் கலைகளை உருவாக்கி மக்களை ஒன்றிணைப்பதே எனது குறிக்கோள்!

    வாங்கோ வாங்கோ ஒண்ணாகி!" என்று பதிவிட்டிருந்தார்.




    ×